யோகி காலில் விழுந்து வணங்கியது ஏன்? - ரஜினி விளக்கம்
தனது ஒவ்வொரு படம் வெளியானதும் இமயமலைக்கு ஆன்மிக பயணம் செல்வதை வழக்கமாக கொண்டவர் ரஜினி. கொரோனா தொற்று காரணமாக 4 ஆண்டுகளாக செல்லவில்லை. அவர் கடைசியாக நடித்த 'ஜெயிலர்' படம் கடந்த 10ம் தேதி வெளியான நிலையில் இந்த முறை இமயமலைக்கு சென்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ‛‛4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஜெயிலர்' படத்தை மிகப்பெரிய வெற்றி அடைய வைத்த என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பட தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைத்து படகுழுவினருக்கும் நன்றியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்,'' என்றார்.
உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது சர்ச்சை ஆகி இருப்பது குறித்து கேட்டபோது, “நட்பு ரீதியான சந்திப்பே தவிர வேறு ஒன்றும் அதில் கிடையாது. சன்னியாசி ஆகட்டும், யோகிகள் ஆகட்டும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். அதைத்தான் நான் செய்தேன். பயணத்தின் போது அரசியல் தலைவர்களை நட்பு ரீதியாக சந்தித்தேன். அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை, என்றார்.