உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோக்களுக்கு வெற்றியை இணைந்து தரும் எஸ்ஜே சூர்யா

ஹீரோக்களுக்கு வெற்றியை இணைந்து தரும் எஸ்ஜே சூர்யா

அஜித் நடித்த 'வாலி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. அடுத்து விஜய் நடித்த 'குஷி' படத்தை இயக்கி அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தார். பின்னர் 'குஷி' படத்தை தெலுங்கு, ஹிந்தியில் இயக்கிவிட்டு மீண்டும் தமிழுக்கு வந்து 'நியூ' படத்தில் நாயகனாகவும் நடித்தார். அதன்பின் 'அன்பே ஆருயிரே, இசை' ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். 'நியூ' படம் தந்த வெற்றியை அடுத்த படங்கள் தரவில்லை.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'இறைவி' படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோருடன் இணைந்து நடித்தார். அதன்பின் கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடம், வில்லன் வேடம் என நடிக்க ஆரம்பித்தார். “ஸ்பைடர், மெர்சல்' படங்களில் அவரது வில்லன் வேடம் பேசப்பட்டது. அதற்கடுத்து சிம்புவுடன் இணைந்து நடித்த 'மாநாடு' படம் எஸ்ஜே சூர்யாவுக்கு தனிப்பெரும் பெயரை வாங்கித் தந்தது. அவர நடிப்பு இளம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தில் நடித்தார். கடந்த மாதம் விஷால் நடித்த 'மார்க் ஆண்டனி' படத்திலும் நடித்திருந்தார். இந்தப் படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படங்கள். அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸுடன் எஸ்ஜே சூர்யா நடிக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் தீபாவளிக்கு வருகிறது.

நேற்று நடைபெற்ற அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராகவா லாரன்ஸ், “இந்தப் படத்துல எனக்குக் கிடைச்ச ஒரு பொக்கிஷம் எஸ்ஜே சூர்யா. உண்மை என்னன்னா சிவகார்த்திகேயன் கூட நடிச்சி சூப்பர் ஹிட் கொடுத்துட்டாரு. விஷால் கூட நடிச்சி சூப்பர் ஹிட் கொடுத்துட்டாரு, இப்ப என் கூட நடிச்சி எனக்கு சூப்பர் ஹிட் கொடுக்கப் போறாரு. அவர் ஒரு குழந்தை மாதிரி… நீங்க இருக்கீங்க, படம் ஹிட்டாகிடும்,” என்றார்.

சிம்பு, சிவகார்த்திகேயன், விஷால் ஆகியோருக்கு இணைந்து வெற்றியைத் தந்த எஸ்ஜே சூர்யா அடுத்து ராகவா லாரன்ஸுக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் மூலம் வெற்றியைத் தருவாரா என்பதற்கு தீபாவளி வரை காத்திருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !