உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ரீ என்ட்ரியில் சாதித்த டி.ஆர்.மகாலிங்கம்

பிளாஷ்பேக்: ரீ என்ட்ரியில் சாதித்த டி.ஆர்.மகாலிங்கம்

ஒரு காலத்தில் ஓஹோவென இருக்கும் நடிகர்கள் பின்னர் மார்க்கெட் இழந்தோ அல்லது வேறு காரணங்களுக்காகவே சினிமாவை விட்டு விலகி இருந்து பின்னர் நடிக்க வருவதை ரீ என்ட்ரி என்பார்கள். சமீபத்தில் மோகன் 'ஹரா' என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதேபோன்று முதன் முதலாக ரீ என்ட்ரி கொடுத்து சாதித்தவர் டி.ஆர்.மகாலிங்கம்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் தென்கரையில் 1924 ஜூன் 16ம் தேதி பிறந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். கோவிலில் பஜனை பாடல்களை பாடிவந்த மகாலிங்கம், ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரால் 13 வயதில் 'நந்தகுமார்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பிறகு அதே ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் மூலமாகவே 'ஸ்ரீவள்ளி' படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படம் பெரிய வெற்றி பெறவே அடுத்தடுத்து 39 படங்களில் நடித்து உச்சத்துக்குச் சென்றார். 1977 வரை திரையுலகிலும் நாடக அரங்கிலும் தனித்த புகழோடு இயங்கினார்.

ஒரு கட்டத்தில் சில கசப்பான அனுபவங்கள் காரணமாக சினிமாவை விட்டு விலகி சொந்த ஊருக்கே சென்று விட்டார். பின்னர் அவர் 'வள்ளி திருமணம்' நாடகத்தை நாடு முழுக்க நடத்தினார். 4 வருடங்களுக்கு பிறகு1959ல் 'மாலையிட்ட மங்கை' படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தயாரித்த கவியரசர் கண்ணதாசன் டி.ஆர்.மகாலிங்கத்தை வற்புறுத்தி நடிக்க வைத்தார். இந்த படமும் வெற்றி பெறவே தனது ரீ என்ட்ரியை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் டி.ஆர் மகாலிங்கம்.

திருவிளையாடல், அகத்தியர், திரு நீலகண்டர், ராஜராஜசோழன், திருமலை தெய்வம் உள்ளிட்ட பல படங்கள் மகாலிங்கம் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு நடித்த முக்கியமான படங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !