உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் 'தி கோட்' - தமிழக உரிமை வாங்கியிருப்பது யார் தெரியுமா?

விஜய்யின் 'தி கோட்' - தமிழக உரிமை வாங்கியிருப்பது யார் தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தி கோட்'. செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் வெளிவர உள்ள முதல் படம் இது. விஜய்யின் தற்போதைய அரசியல் நகர்வு திமுகவுக்கு எதிராக உள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு ஆளும் அரசை குறை கூறியிருந்தார் விஜய்.

இந்நிலையில் 'தி கோட்' படத்தின் தமிழக உரிமையை ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு நெருக்கமான ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம்தான் வாங்கியிருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல். சுமார் 70 கோடி அளவிற்கு தமிழக உரிமை விலை போயிருக்கிறது.

இதற்கு முன்பு சந்தானம் நடிப்பில் வந்த 'வடக்குபட்டி ராமசாமி' படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் வாங்கியிருந்தது. ஆனால், அந்தப் படத்தை ரெட்ஜெயன்ட் வெளியிடுவதற்கு கட்சியினரிடம் எதிர்ப்பு எழுந்தது. அதன்பின் அவர்களது பெயர் நீக்கப்பட்டு ரோமியோ பிக்சர்ஸ் படத்தை வெளியிடுவதாக அறிவித்தார்கள்.

தனது 'தி கோட்' படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் நெருங்கிய நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் வாங்கியிருப்பது விஜய்க்குத் தெரியுமா, தெரியாதா என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !