அடுத்தடுத்து இரண்டு 50 நாட்கள் : கதாநாயகனாக ஜெயித்த சூரி
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் கதாநாயகர்களாகவும் வலம் வந்த வரலாறு இதற்கு முன்பு உண்டு. என்எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு என்ற அந்த பட்டியலில் சூரியும் இணைந்துவிட்டார்.
ஆனாலும், கதாநாயகனாக அடுத்தடுத்து இரண்டு 50 நாட்கள் படங்களைக் கொடுத்துவிட்டார் சூரி. கடந்த வருடம் வெளிவந்த 'விடுதலை பாகம் 1' படமும் 50 நாட்கள் ஓடியது. மே மாதம் 31ம் தேதி வெளிவந்த 'கருடன்' படமும் நேற்றோடு 50 நாட்களைத் தொட்டுள்ளது.
முக்கிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் அடங்கிய போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்து, “உங்களின் பேராதரவுடன் இன்று வெற்றிகரமான 50வது நாள்,” என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் சூரி.
'விடுதலை, கருடன்' இரண்டு படங்களுமே வழக்கமான கமர்ஷியல் படங்கள் அல்ல. கதை, கதாபாத்திரங்கள் என பேசப்பட்ட மாறுபட்ட படங்களாக அமைந்தன.
இதில் ஒரு ஆச்சரியம் உள்ளது. 'விடுதலை 1' படத்திற்கு இசை இளையராஜா, 'கருடன்' படத்திற்கு இசை யுவன்ஷங்கர் ராஜா.
அடுத்து 'விடுதலை 2' படம் வெளியாக உள்ளது. அதுவும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. அதுவும் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றி தந்த நாயகனாகிவிடுவார் சூரி.