உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / போதையில் தகராறு : பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு பதிவு

போதையில் தகராறு : பாடகர் மனோ மகன்கள் மீது வழக்கு பதிவு

சென்னை : குடிபோதையில் இரு வாலிபர்களை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மற்றும் பிற மொழிகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருப்பவர் மனோ. தற்போதும் வாய்ப்பு கிடைக்கும் படங்களிலும் பாடுகிறார். ஏராளமான இசை நிகழ்ச்சிகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வருகிறார்.

சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன்(20). மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று இரவு பயிற்சி முடித்து விட்டு அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர்.

அப்போது குடிபோதையில் இருந்த பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் உட்பட ஐந்து பேர் சேர்ந்து கிருபாகரன் மற்றும் 16 வயது சிறுவனிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் கிருபாகரனையும் அந்த சிறுவனையும் 5 பேர் சேர்ந்து அடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது . இதில் கிருபாகரன் மற்றும் சிறுவன் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் வெளியானதை தொடர்ந்து மனோவின் மகன்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !