சின்மயி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்ற சமந்தா
கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நவராத்திரி விழாவை திரையுலக பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர். நவராத்திரி பூஜைகளிலும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் நடிகை சமந்தா முதல் நாள் அன்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள துர்கா தேவி சிலை முன்பாக வழிபாடு நடத்தி துவங்கினார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடைபெற்ற ஆலியா பட் நடித்துள்ள ஜிக்ரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். அப்படியே ஐதராபாத்தில் உள்ள தனது தோழியும் பின்னணி பாடகியுமான சின்மயி வீட்டிற்கும் விசிட் அடித்துள்ளார்.
அங்கே நடைபெற்று வரும் நவராத்திரி பூஜை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ள சமந்தா, சின்மயியின் குழந்தையை தனது இடுப்பில் வைத்துக் கொண்டு அப்பா அம்மாவுக்கு டாட்டா சொல்லச் சொல்லி சொல்வது போல ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களும் வீடியோவும் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றன. சின்மயியும் சமந்தாவும் பல வருடங்களாகவே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இருவரும் தங்களது சொந்த வாழ்க்கையிலும் திரை உலகத்திலும் பல பிரச்னைகளை எதிர்கொண்ட போது ஒருக்கொருவர் தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து நட்பை பேணி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.