விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்'
அரூர் பிரைவேட் லிமிடெட் சார்பில் வெங்கடேசன் தயாரிக்கும் படம் 'மருதம் '. வி.கஜேந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் கதை நாயகனாக விதார்த் நடித்துள்ளார். ரக்ஷனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அருள்தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்ஆர் ரகு நந்தன் இசையமைத்துள்ளார்
படம் பற்றி இயக்குனர் கஜேந்திரன் கூறும்போது விவசாயின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள படம் “மருதம்”. விவசாயம் ஆதி குடியின் முதல் தொழில், நிலத்திற்கும், மண்ணுக்கும், விவசாயிக்கும் இடையிலான உறவு தான், மற்ற அனைத்து உறவுகளை விடவும் முதன்மையானது. இன்றைய காலகட்டத்தில் ஒரு விவசாயி சந்திக்கும் பிரச்சனைகளை, கைவிட்டுப்போகும் அவனது நிலத்திற்கும் அவனுக்குமான உறவை, சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது என்றார்.