'எமகாதகி' கதை எனக்கு புரியவில்லை: ரூபா கொடவாயூர்
சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் 'எமகாதகி'. பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கிய இந்த படத்தில் பிணமாக நடித்து கவனம் ஈர்த்துள்ளார் ரூபா கொடவாயூர். அவரது நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ரூபா கொடவாயூர் பேசியதாவது: இந்த படத்தின் கதையை இயக்குனர் சொன்னபோது எனக்கு புரியவில்லை. பிணம் என்கிறார், சாவு வீடு என்கிறார், இறுதி சடங்கு என்கிறார். இது எந்த மாதிரியான படம் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. முதல் படத்திலேயே பிணமாக நடிக்க வேண்டுமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் சீனிவாசராவ் ஜலகம் எனக்கு கதையை புரிய வைத்தார். பிணமாக நடித்தாலும் உங்கள் கேரக்டருக்கு காதல் இருக்கிறது. ஜாதியை எதிர்த்து போராடும் துணிச்சல் இருக்கிறது. நீதியை தட்டி கேட்கும் தைரியமுள்ள பெண்ணாக உங்கள் கேரக்டர் எழுதப்பட்டிருக்கிறது என்பதை சொன்ன பிறகுதான் எனது கேரக்டரின் தன்மை புரிந்தது.
என் முதல் படம் இது, இப்படி ஒரு நல்ல திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. இதை மிஸ் செய்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பேன். பெப்பின் சார் எனக்கு லீலா பாத்திரத்தை தந்ததற்கு மிக்க நன்றி. என்னுடன் நடித்த நடிகர்கள் அனைவரும் எனக்குப் பெரிய ஒத்துழைப்பு தந்தார்கள். கீதா மேடம் அமரன் படத்திற்கு அப்புறம் இப்படத்தில் மிக அற்புதமாக நடித்துள்ளார். தொடர்ந்து நல்ல கதையம்சமுள்ள படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.