உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: ஜோடி மாறியதால் தோல்வி அடைந்த 'பவளக்கொடி'

பிளாஷ்பேக்: ஜோடி மாறியதால் தோல்வி அடைந்த 'பவளக்கொடி'


பவளத்தீவின் (பவளத்தீவு) இளவரசி பவளக்கொடியை அர்ஜுனன் காதலிக்கும் கதை பல தலைமுறைகளாக பிரபலமாக உள்ளது, இருப்பினும் மகாபாரதத்திலோ அல்லது வேறு எந்த காவியத்திலோ அப்படி எந்த கதையும் காணப்படவில்லை. புராண கதாபாத்திரங்களை கொண்டு கற்பனையாக உருவான கதை. இது பல ஆண்டுகள் நாடகமாக நடத்தப்பட்டு 1934ம் ஆண்டு திரைப்படமானது. எம்.கே. தியாகராஜ பாகவதர் மற்றும் எஸ்.டி. சுப்புலட்சுமி ஆகியோர் நடித்தனர், கே.சுப்பிரமணியம் இயக்கினார்.

ஆனால் இதே கதை 1949ம் ஆண்டு மீண்டும் தயாரானது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. காரணம் சற்று புதுமையானது. இந்த படத்தில் டி.ஆர். மகாலிங்கம், டி.ஆர். ராஜகுமாரி, டி.இ.வரதன், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம், நாகர்கோவில் கே. மகாதேவன், எம்.எஸ். சரோஜினி, 'லக்ஸ் பியூட்டி' குமாரி என். ராஜம் மற்றும் லலிதா-பத்மினி ஆகியோர் நடித்திருந்தனர்.

படத்தின் போஸ்டர் விளம்பரங்களை பார்த்த ரசிகர்கள், டி.ஆர்.மகாலிங்கமும், டி.ஆர்.ராஜகுமாரியும்தான் அர்ஜூனன், பவளக்கொடியாக நடித்திருக்கிறார்கள் என்று நினைத்தனர். அப்போது இந்த ஜோடி பிரபலம் என்பதால் படத்திற்கும் எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் படம் வெளிவந்த பிறகுதான் தெரிந்தது பவளக்கொடிக்கு அதாவது டி.ஆர்.ராஜகுமாரிக்கு ஜோடியாக டி.இ.வரதன் என்ற புதுமுகம் நடித்திருந்தார். இவர்கள் காதலை சேர்த்து வைக்கும் கிருஷ்ணராக டி.ஆர்.மகாலிங்கம் நடித்திருந்தார்.

பல படங்களில் மகாலிங்கம், ராஜகுமாரி ஜோடியை ரசித்த ரசிகர்களால் அவர் ராஜகுமாரியை இன்னொருவருடன் சேர்த்து வைக்கும் கிருஷ்ணராக நடித்ததை ஏற்கவில்லை. அதனால் இந்த படம் தோல்வியை தழுவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !