மீண்டும் இணைந்த ‛ரவுடி பேபி' கூட்டணி
‛அமரன்' படத்திற்கு பின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் தனுஷின் 55வது படத்தை இயக்குகிறார். இதை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், பாலிவுட் நிறுவனமான ஆர் டேக் ஸ்டுடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இந்த படத்தின் அப்டேட்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இணைந்தார்.
இதையடுத்து கதாநாயகியாக நடிக்க ஸ்ரீலீலா இணைந்தார். இப்போது இன்னொரு நாயகியாக சாய் பல்லவியும் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். மாரி 2 படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ், சாய் பல்லவி ஜோடி இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளியான ‛ரவுடி பேபி' பாடல் 1727 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. அதுமட்டுமல்ல அமரன் படத்திற்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மீண்டும் சாய் பல்லவி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.