ரீமேக் படங்கள்தான் கட்சியை நடத்த உதவியது: பவன் கல்யாண்
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரிஹர வீரமல்லு' படம் நாளை மறுதினம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு நேற்று இரவு ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பவன் கல்யாண், அவரது ரீமேக் படங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
ரீமேக் படங்களில் நடிப்பதற்காக மக்கள் என்னை விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? நம்மிடம் பல சிறந்த இயக்குநர்கள் கிடைப்பது இல்லை. எல்லோரும் என்னை விரைவாக பணம் கொண்டு வரக்கூடியவர் என்று பார்த்தார்கள். நான் ரீமேக் படங்களைச் செய்யாவிட்டால், கட்சியை நடத்துவதற்கு நிதி எங்கிருந்து வரும்?, என் குடும்பத்தை யார் ஆதரிப்பார்கள், ரீமேக் படங்கள் எனக்கு கட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கு எளிதான பாதையாக மாறியது.
நான் செய்த ஒரு தவறு, தோல்வியை அளித்தது. அந்தத் தோல்விக்குப் பிறகு, நான் தொழிலில் என் பிடியை இழந்தேன். ஆனால், பின்னர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் என் வாழ்க்கையில் மீண்டும் வந்து, 'ஜல்சா' படம் மூலம் ஒரு வெற்றியைத் தந்து, என்னை மீண்டும் உயர்த்தினார்.
பயம் அல்லது திறமையின்மையால் அசல் கதைகளைத் தவிர்க்கவில்லை, மாறாக நடைமுறைத் தேவைகளால், எனது அரசியல் பயணத்திற்கு நிதி திரட்டுவதற்காகவே ரீமேக் படங்களில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,” என்று பேசினார்.