உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் சங்க பொதுச்செயலாளராக போட்டியிடுபவருக்கு எதிராக பரப்பப்படும் மெமரி கார்டு குற்றச்சாட்டு

நடிகர் சங்க பொதுச்செயலாளராக போட்டியிடுபவருக்கு எதிராக பரப்பப்படும் மெமரி கார்டு குற்றச்சாட்டு


மலையாள திரையுலகில் நடிகர் சங்கத்திற்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. மோகன்லால் தலைமையிலான நிர்வாக குழு ராஜினாமா செய்த பின், மீண்டும் அவர் போட்டியிட மறுத்து விட்டதால் இந்த தேர்தல் மிகுந்த பரபரப்புடன் நடைபெற இருக்கிறது. குறிப்பாக முதன் முதலில் ஒரு பெண், அதுவும் நடிகையான ஸ்வேதா மேனன் தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கிறார். அதை தடுக்கும் விதமாக சில முயற்சிகள் கூட நடைபெற்றது. அவர் மீது பழைய வழக்கு ஒன்றுக்காக தற்போது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதை நீதிமன்றம் நிறுத்தி வைத்து விட்டது.

இந்த நிலையில் பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகை குக்கூ பரமேஸ்வரன் என்பவர் போட்டியிடுகிறார். இதற்கு முன்பும் இவர் நிர்வாக குழுவில் பொறுப்பில் இருந்தவர் தான். இந்த நிலையில் இவர் மீது நடிகை ஹசீனா என்பவர் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அதாவது மீ டூ பிரச்சாரம் உச்சத்தில் இருந்த சமயத்தில் அதுகுறித்து மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்த பெண் உறுப்பினர்கள், தனியாக ஒரு அறையில் அமர்ந்து தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியான பிரச்னைகளையும் அது தீர்க்கப்பட வேண்டிய முறைகள் பற்றியும் ஒரு கூட்டம் நடத்தினார்கள்.

அந்த கூட்டத்தில் நடந்த அனைத்து பேச்சுக்களும் வீடியோவாக ரெக்கார்ட் செய்யப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்த வீடியோ அடங்கிய மெமரி கார்டு காணாமல் போய்விட்டது என்கிற தகவல் வெளியானது. அப்போது பரபரப்பை ஏற்படுத்தினாலும் கடந்த இரண்டு வருடங்களாக அது குறித்த பேச்சு எழவில்லை. இந்த நிலையில் நடிகை ஹசீனா என்பவர் இந்த மெமரி கார்டு காணாமல் போனதன் பின்னணியில் தற்போது பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் குக்கூ பரமேஸ்வரன் தான் இருக்கிறார். அவர்தான் வேண்டுமென்றே பலரை காப்பாற்றுவதற்காக இந்த மெமரி கார்டு காணாமல் போய்விட்டதாக நாடகம் ஆடுகிறார் என குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இது குறித்து நடிகை குக்கு பரமேஸ்வரன் கூறுகையில், “இத்தனை நாளாக இல்லாமல் தற்போது தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், நான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை விரும்பாத சிலர் இதுபோன்று என் மீது களங்கம் விளைவிக்கும் விதமாக அவதூறு பரப்பி வருகிறார்கள்” என்று கூறியுள்ளதுடன் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை டிஜிபியிடமும் புகார் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !