உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு


விஜய் ஆண்டுதோறும் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்து வருகிறார். அதிக வருமானவரி செலுத்தும் நடிகர்களில் இந்திய அளவில் அவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்த வகையில் விஜய், கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்தார். அதில், அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் என்று குறிப்பிட்டிருந்தார்.

வருமான வரிக்கணக்கை அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர். அப்போது, விஜய் 'புலி' படத்தில் நடித்ததற்காக பெற்ற 15 கோடியை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 15 கோடி வருமானத்தை மறைத்ததற்காக விஜய்க்கு 1.5 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அபராதம் விதித்து வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ''3 ஆண்டுகள் காலதாமதமாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்'' என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. “வருமான வரிச் சட்டப்படிதான் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை சரிதான். அதனால் விஜய் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று வருமானவரித்துறை சார்பில் வாதிடப்பட்டது.

அபராத்தை ரத்து செய்ய மறுத்ததுடன், அப்படி ரத்து செய்ய வேண்டுமானால், இதேபோன்ற ஒரு வழக்கில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற அக்டோபர் மாதம் 10ம்தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !