உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு

கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு

தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகின்றன. அதோடு, பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகளும் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

விக்ரம் பிரபு, எஸ்ஜே சூர்யா, சாய் பல்லவி, அனிருத், லிங்குசாமி உள்ளிட்ட பல கலைஞர்கள் இந்த விருதுக்கு தேர்வாகினர். இவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று(அக்., 11) நடந்தது. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று கலைஞர்களுக்கு விருது வழங்கினார்.

ஜேசுதாஸிற்கு கவுரவம்
பாடகர் கே.ஜே.யேசுதாஸிற்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. யேசுதாஸ் அமெரிக்காவில் இருப்பதால் அவர் சார்பில் அவரது மகன், பாடகர் விஜய் யேசுதாஸ் பெற்றுக் கொண்டார். யேசுதாஸ் காணொளி வாயிலாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்ததோடு, விருது பெற்ற சக கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் தன்னால் வர முடியாததற்கு வருத்தமும் தெரிவித்தார்.

தொடர்ந்து விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, அனிருத், சாய் பல்லவி, லிங்குசாமி, சூப்பர் சுப்பராயன், விவேகா, மணிகண்டன், ஜார்ஜ் மரியான், சாண்டி, கமலேஷ், ‛மெட்லி ஒலி' காயத்ரி, விக்ரமன் மனைவி, நடன கலைஞர் ஜெயப்பிரியா உள்ளிட்ட கலைஞர்களும் முதல்வர் ஸ்டாலின் கையால் கலைமாமணி விருது பெற்றனர். பாடகி ஸ்வேதா மோகனுக்கு பதில் அவரது அம்மா பாடகி, சுஜாதா விருதை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் சாமிநாதன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !