'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல்
பெங்களூரு : கோச்சடையான் பட விவகாரத்தில் நடிகர் ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. நிதி மோசடி, போலி ஆவணம் தயாரித்தது தொடர்பாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று, பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014ல், கோச்சடையான் அனிமேஷன் படம் வெளியானது. ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கினார். தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை, 'ஆட் பீரோ அட்வர்டைசிங்' நிறுவனம் மேற்கொண்டது. இந்நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிதி தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ரஜினி மனைவி லதா மீது கிரிமினல் வழக்கு பதிவானது.
'ஆட் பீரோ அட்வர்டைசிங்' நிறுவனம் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்த லதா, ஊடகங்கள் செய்தி வெளியிட, நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு கோரினார். தங்கள் நிறுவனத்தின் பெயரில், போலி ஆவணம் தயாரித்த லதா மீது, 'ஆட் பீரோ அட்வர்டைசிங்' நிறுவனம், ஹலசூரு கேட் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர் மீது வழக்குப்பதிவானது.
இந்நிலையில் தன் மீது பதிவான வழக்குகளை தள்ளுபடி செய்ய கோரி, லதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, பெங்களூரு 48வது தலைமை ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிபதி ஜோதி சந்தனா விசாரித்தார். மனு மீது விசாரணை முடிந்த நிலையில், மனுதாரர், தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்வதற்கான, எந்தவித நியாயமான காரணத்தையும் குறிப்பிடவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மனுதாரர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறிய நீதிபதி, அடுத்த மாதம் 10ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டார்.