மீண்டும் ஒரு ராணுவ படத்திற்காக இணையும் மோகன்லால்-மேஜர் ரவி கூட்டணி
ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் மலையாள திரை உலகில் தொடர்ந்து ராணுவப் பின்னணியில் திரைப்படங்களை இயக்கி வருபவர் மேஜர் ரவி.. அதிலும் மோகன்லாலை வைத்து இவர் ஐந்து படங்களை இயக்கியுள்ளார். அதே சமயம் கடந்த 2012ல் 'கர்மயோதா', 2017ல் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' என மோகன்லாலை வைத்து இவர் கடைசியாக அடுத்தடுத்து இயக்கிய படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை. அதன்பிறகு மேஜர் ரவியும் படம் எதுவும் இயக்கவில்லை. இந்த நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோகன்லால் நடிக்க இருக்கும் படத்தை மேஜர் ரவி இயக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் மோகன்லால் உடன் சரத்குமாரும் ஹிந்தி நடிகர் பரேஷ் ராவலும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அம்பிகா நாயர் என்பவர் எழுதிய குதுப்மினார் என்கிற சிறுகதையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்தக் கதையை ஏற்கனவே மோகன்லாலிடம் சொல்லி மேஜர் ரவி ஓகே பண்ணி வைத்திருந்தாலும் தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வி என்பதால் இந்த படம் தள்ளிக்கொண்டே போனது. இந்தநிலையில் தான் வரும் 2026 ல் இந்த படத்தின் வேலைகள் மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.