உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி

பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி

ஸ்ரீசத்ய சாய் பாபா மகிமை சொல்லும் அனந்தா பட டீசர், பாடல்கள் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறுகையில் ''என்னுடைய 10வது வயதில், அதாவது 65 ஆண்டுகளுக்கு முன்பு சத்யசாய் பாபாவை நேரில் சந்தித்தேன். வட சென்னையில் அவரை நேரில் பார்த்தது இன்னமும் மனதில் நிற்கிறது. இந்த படத்தை நான் எடுத்து இருக்க கூடாதா என நினைக்கிறேன் என்றார்.

படத்தில் பாபா பக்தையாக நடித்த நடிகை சுஹாசினி பேசியது ''இன்றைய காலகட்டத்தில் நம்மை சுற்றி வன்முறை, எதிர்மறை எண்ணங்கள், ஈகோ அதிகமாக இருக்கிறது. இப்போது இப்படிப்பட்ட படம் வருவது நல்லது. நம்மால் எதுவும் முடியாத நிலையில் நமக்கு அதிசயங்கள் நடக்கும். அப்படிப்பட்ட அதிசயத்தை இந்த கதை சொல்கிறது. நான் இந்த படத்துக்காக காசிக்கு சென்றேன். அது மறக்க முடியாத அனுபவம். இந்த படம் நம்பிக்கையை, மகிமை சொல்கிறது என்றார்.

இசையமைப்பாளர் தேவா பேசியது, 'உலகமெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களை கொண்ட பாபா படத்துக்கு, எனக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம். எனக்கு அண்ணாமலை படத்தின் மூலம், சுரேஷ் கிருஷ்ணா மூலம் வெளிச்சம் கிடைத்தது. இந்த படத்தையும் அவர் கொடுத்து இருக்கிறார். 5 குடும்பங்களின் நடக்கும் விஷயங்கள், பாபா மகிமையை இந்த படம் சொல்கிறது. தயாரிப்பாளர் கிரிஷ் அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் யாரும் நடிக்கலை, கேரக்டராக வாழ்ந்துவிட்டார்கள்.

ஒரு வியாழக்கிழமை பாடல் கம்போசிங் ஆரம்பித்தோம். பாடல் வரிகள், டியூன் அதுவாகவே வந்தது. எல்லாம் அவன் செயல். நம்மால் இப்படிப்பட்ட பாடல்களை தர முடியாது. ஹரிகரன், மனோ, சின்மயி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். பல மொழிகளில் நான் இசையமைத்து இருந்தாலும் ஹிந்தியில் பாட்டு பண்ணலையேனு பீல் பண்ணினேன். இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்காக குணால் என்பரை வைத்து ஒரு பாடலை பாட வைத்துவிட்டேன்.

நான் 8வது படிக்கும்போது ஒருவர் அழைத்ததால் மயிலாப்பூரில் இருந்து சைக்கிள் மிதித்து சத்யசாய்பாபா கச்சேரிக்கு தபேலா வாசிக்க சென்றேன். அப்போது அவர் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், அந்த கச்சேரியில் பாபா படம் முன்பு விபூதி கொட்டியது. நான் தபேலா வாசிப்பதை நிறுத்திவிட்டு அழுதேன். வீட்டுக்கு அவர் மீது நம்பிக்கையுடன் சென்றேன்'' என்றார்.

பாடகர் மனோ பேசியது '' பாபாவின் 70வது பிறந்தநாளில் புட்டபர்த்தி சென்று பாடினேன். அவர் தேரில் வந்தார். இப்போது 100வது பிறந்தநாளில் அவர் படத்துக்கு பாட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !