உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் ஏவிஎம் சரவணன், சென்னையில் காலமானார். ரஜினி, சூர்யா, விஷால் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். ஏவிஎம் நிறுவனத்தால் குழந்தையாக சினிமாவில் அறிமுகமான கமல்ஹாசன் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அவர் டில்லியில் இருப்பதால் வரவில்லை. இந்நிலையில் அங்கிருந்தபடி ஒரு இரங்கல் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, ‛‛ஏவிஎம் சரவணனுக்கும் எனக்குமான உறவு என் அண்ணன்கள் சந்திரஹாசன், சாருஹாசன் இடையே உள்ள உறவு போன்றது. ஒரு தகப்பனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தான் அவருக்கும் தருகிறேன். குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாக உரிமை கொண்டாடுகிறேன். நான் தனி மரம் அல்ல. ஏவிஎம் என்ற தோப்பில் நடப்பட்ட சிறு செடிகளில் நானும் ஒருவன். இப்போது வளர்ந்து இருக்கிறேன். அந்த வளாகத்தில் நிறைய கற்று இருக்கிறேன். அவரது பெயர் சொல்லும் பிள்ளைகளின் நானும் ஒருவன். அவருக்கு நன்றி சொல்வதென்றால் அவர் போட்டு தந்த பாதையில் வீறு கொண்டு நடப்பது தான். நன்றி அய்யா, அனைத்திற்கும்...!'' என தெரிவித்துள்ளார்.
ஏவிஎம் நிறுவனத்தில் கமல் பல படங்களில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று ‛பேர் சொல்லும் பிள்ளை'. அதையே தனது இரங்கல் செய்தியாக சரவணனுக்கு புகழஞ்சலி சூட்டி உள்ளார் கமல்.