பாபி சிம்ஹாவின் புதிய படம் தொடங்கியது
'பீட்சா, சூதுகவ்வும்' படங்களில் நடித்த பாபி சிம்ஹா, 'நேரம்' படத்தின் மூலம் கவனிக்கப்பட்டார், 'ஜிகர்தண்டா' படத்தில் தேசிய விருது பெற்று புகழ்பெற்றார். பெரிய அளவிற்கு வருவார் என்று கணிக்கப்பட்ட பாபி சிம்ஹா, அதன் பிறகு நடிப்பில் ஒரே பாணியை பின்பற்றியதாலும், கதை தேர்வில் சொதப்பியதாலும் எதிர்பார்த்த வளர்ச்சியை பெறவில்லை. என்றாலும், தெலுங்கு, தமிழ், மலையாளத்தில் 30 படங்கள் வரை நடித்து விட்டார். கடைசியாக 'இந்தியன் 2' படத்தில் நடித்தார்.
தற்போது புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். யுவா கிருஷ்ணா தயாரிப்பில் மெஹர் யாரமாட்டி இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹெப்பா படேல் நடிக்கிறார். தனிகல பரணி மற்றும் சூர்யா ஸ்ரீனிவாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார், சித்தார்த் சதாசிவுனி இசை அமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாகிறது.
இதுகுறித்து பாபி சிம்ஹா கூறும்போது, ''ஒரு நடிகனாக எனக்கு இது சவாலான கதை. என் திரைவாழ்க்கையில் இது ஒரு புதிய முயற்சி. சவாலான கதைக்களம் என்பதால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். விசாகபட்டினத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது'', என்றார்.