உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகைகளின் ஆடைகள் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவாஜி

நடிகைகளின் ஆடைகள் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவாஜி

தெலுங்குத் திரையுலகத்தின் நடிகர்களில் ஒருவர் சிவாஜி. முரளிகாந்த் தேவசோத் இயக்கத்தில் சிவாஜி, நவதீப், நந்து பிந்து மாதவி, ரவி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ள தெலுங்குப் படமான 'தண்டோரா' படம் இந்த வாரம் டிசம்பர் 25ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் நடிகைகள் அணியும் ஆடைகள் குறித்து சிவாஜி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“தெலுங்கு சினிமாவில் கதாநாயகிகள் திரைக்கு வெளியே அணியும் ஆடைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுகிறது. உடல் பகுதிகளை வெளிப்படுத்தும் விதமாக ஆடைகளை அணிவது அழகை வரையறுக்காது. பெண்கள் புடவை மற்றும் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்களிடம் மக்கள் தாய்மையைப் பார்க்கிறார்கள். புடவை அணிந்த பெண்கள் இயற்கையின் அழகை அதிகரிக்கின்றனர்.

சாவித்ரி மற்றும் சவுந்தர்யா போன்ற புகழ் பெற்ற நடிகைகள் பாரம்பரிய புடவைகளை அணிந்தபடி தெலுங்கு சினிமாவில் தாக்கத்தை உருவாக்கினார்கள். தற்போதைய தலைமுறையில் ரஷ்மிகா மந்தனா கூட கிளாமரை வெளிப்படுத்தாத ஆடைகளை அணிந்து வெற்றி பெற்றுள்ளார். நான் பேசுவது சிலரது மனதை புண்படுத்தலாம். ஆனால், அத்தகைய மதிப்புகளை பின்பற்றுவது சமூகத்திற்கு நல்லது” என்று அவர் பேசியுள்ளார். அவர் பேசும்போது சில அநாகரிகமான வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் அணியும் ஆடை குறித்து யார் பேசினாலும் அது சர்ச்சையாகிறது. சிவாஜி அவருடைய பேச்சில் சிலரது மனது புண்படலாம் என்று குறிப்பிட்ட பிறகும், அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக அவர் பேசிய ஆடை விஷயத்தை விட அவர் பேசிய தவறான வார்த்தைகளை குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !