'திரிஷ்யா 3' எடுப்பார்களா என தெரியவில்லை ; நவ்யா நாயர் சந்தேகம்
மலையாளத்தில் மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து அதன் மூன்றாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. அதேபோல ஹிந்திலும் ஏற்கனவே இதன் இரண்டு பாகங்கள் ரீமேக் செய்து வெற்றியை பெற்ற நிலையில் தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் மூன்றாம் பாகமும் விரைவில் துவங்கப்பட இருக்கிறது.
மலையாளத்தில் கதாநாயகன் மோகன்லாலின் மனைவி கதாபாத்திரத்தில் மீனா நடித்திருந்தார். ஹிந்தியில் அதே கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயா நடித்திருந்தார். தற்போது இரண்டு மொழிகளிலும் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாவதன் மூலம் இவர்கள் இருவரும் மீண்டும் லைம்லைட்டுகள் வருகிறார்கள்.. அதேபோல கன்னடத்தில் இதே திரிஷ்யம் படத்தை 'திரிஷ்யா' என்கிற பெயரில் இரண்டு பாகங்களாக இயக்கினார் இயக்குனர் பி.வாசு. ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் அவரது மனைவியாக நடிகை நவ்யா நாயர் நடித்திருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மார்கழி உற்சவ நிகழ்ச்சியில் தனது நடன நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ள நவ்யா நாயர் தமிழில் நடிப்பதற்காக நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். அப்போது அவரிடம் கன்னடத்தில் 'திரிஷ்யா 3' படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட போது, திரிஷ்யா மூன்றாம் பாகத்தை கன்னடத்தில் எடுக்கிறார்களா இல்லையா என்பது இப்போது வரை எனக்கு தெரியவில்லை. இப்போதைக்கு படக்குழுவினரிடம் இருந்து எந்தவித அழைப்பும் இந்த மூன்றாம் பாகம் குறித்து எனக்கு வரவில்லை” என்று கூறியுள்ளார். ஒருவேளை மலையாளம் மற்றும் ஹிந்தியில் இந்த படத்தின் மூன்றாம் பாகங்கள் வெளியான பிறகு கன்னடத்தில் ரீமேக் செய்வார்களோ என்னவோ ?