தமிழக அரசியல் விஜய் வந்த பின் ஒரு சலசலப்பு ஏற்பட்டது உண்மைதான். அதே சமயம் அவருடைய சில நடவடிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. சில தலைவர்களுடைய பிறந்தநாளின் போது கூட பனையூர் அலுவலகத்தில் அந்தத் தலைவர்களின் புகைப்படங்களை வைத்து ஒரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, சில வரிகளை எக்ஸ் தளத்தில் பதிவிடுவதுடன் நிறுத்தி விடுகிறார்.
கடந்த வருடம் அவர் கரூரில் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி அகால மரணமடைந்தனர். அதனால், போன வருடம் அதன்பின் வந்த தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என்று அவர் தரப்பில் முடிவெடுத்தார்கள். தீபாவளியை முன்னிட்டு விஜய் எந்த வித வாழ்த்து செய்தியும் தெரிவிக்கவில்லை.
ஆனால், அதற்கடுத்த இரண்டு மாதங்களில் வந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை மட்டும் ஒரு பிரம்மாண்டமான விழாவாக மகாபலிபுரத்தில் கொண்டாடினார். அதில் கிறிஸ்துவ மத போதகர்கள் உள்ளிட்ட பல கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
அதே சமயம், தற்போதைய கொண்டாட்டமான தமிழர்கள் பொங்கல் விழாவை அவர் கொண்டாடுவதைத் தவிர்த்துள்ளார். கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடிய விஜய், பொங்கல் விழாவைக் கொண்டாடாமல் போனது ஏன் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கடந்த திங்களன்று கரூர் பலி குறித்த சிபிஐ விசாரணைக்காக டில்லிக்குச் சென்றார். பொங்கல் கொண்டாட வேண்டும் என்ற காரணத்தை சொல்லி மீண்டும் ஆஜராவதை பொங்கலுக்குப் பிறகு தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாகச் சொன்னார்கள்.
இருந்தாலும் இந்த இரண்டு நாட்களில் அவர் வாழ்த்துகளைச் சொன்னதைத் தவிர பொங்கல் கொண்டாடியதாக எந்த ஒரு புகைப்படமும், வீடியோவும் வெளியாகவில்லை. சிபிஐ விசாரணை காரணமாக, அவர் வருத்தத்தில் இருப்பதால் இதைத் தவிர்த்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.