ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்துள்ள கடைசி திரைப்படமான ஜனநாயகன், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன., 9ல் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதையடுத்து, தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி, படத்தை தயாரித்த கே.வி.என்., நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த தனி நீதிபதி ஆஷா, தணிக்கை வாரிய பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்கள் அடிப்படையில், யு/ஏ சான்றிதழ் வழங்க ஜன., 9ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தயாரிப்பு நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், மீண்டும் இந்த விவகாரத்தை தனி நீதிபதி அமர்வுக்கு அனுப்பி வைத்தது.
இதையடுத்து ஜனநாயகன் திரைப்பட வெளியீடு கேள்விக்குறியானது. இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதன் காரணமாக, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், 'தங்கள் தரப்பு வாதங்களை கேட்ட பிறகே இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒருமுறை திரைப்பட தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடிய போது, அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்றம், விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.