மழை மனிதன் ஆக மாறினேன் ; 'துரந்தர்' சுவாரஸ்யம் பகிர்ந்த மாதவன்
கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் 'துரந்தர்' திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 1300 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. ஆதித்யா தர் இயக்கிய இந்த படத்தில் ரன்வீர் சிங் தவிர மிக முக்கியமான வேடத்தில் நடித்திருந்த அக்ஷய் கன்னா மிகவும் வரவேற்பு பெற்றார். இவர்களை தவிர சஞ்சய் தத், மாதவன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடித்த மாதவன் சமீபத்தில் இந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரசிய விஷயம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நான் எப்போது படப்பிடிப்பிற்கு சென்றாலும் அப்போது மழை வந்துவிடும். படப்பிடிப்பு தளத்திலேயே எனக்கு ரெயின் மென் என்று தான் பெயர் வைத்திருந்தார்கள். அப்படி ஒரு நாள் லே மற்றும் லடாக் பகுதியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்தார் இயக்குனர் ஆதித்யா தர். அப்போது சுட்டெரிக்கும் சூரியனோடு நல்ல வெளிச்சம் காணப்பட்டது. ஆனால் நான் அங்கே சென்ற கொஞ்ச நேரத்திலேயே மேகம் மாறி மழை பெய்ய துவங்கியது. இருந்தாலும் இயக்குனர் ஆதித்யா அந்த சூழ்நிலையை படத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டு காட்சிகளை எடுத்தார். சில நேரத்தில் அப்படித்தான் சூழ்நிலையோடு இணைந்து பயணிப்பது நல்லது” என்று அந்த பதிவில் கூறியுள்ளார் மாதவன்.