உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய், அஜித், சிரஞ்சீவிக்கு சென்ற ‛சிலம்பாட்டம்' படக் கதை

விஜய், அஜித், சிரஞ்சீவிக்கு சென்ற ‛சிலம்பாட்டம்' படக் கதை

கடந்த 2008ம் ஆண்டில் சரவணன் இயக்கத்தில் சிலம்பரசன், பிரபு, சினேகா, சனா கான், சந்தானம், கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வெளிவந்த படம் 'சிலம்பாட்டம்'. இந்த படத்தை பிப்., 6ல் ரீ ரிலீஸ் செய்கின்றனர். இதுதொடர்பாக இயக்குனர் சரவணன் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது...

முதலில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியிடம் இந்த படக் கதையை கூறினேன். அவருக்கு கதை பிடித்திருந்தாலும், ஒரு சில காரணங்களால் அது கைகூடவில்லை. அடுத்து விஜய்யின் 'பூவே உனக்காக', 'ஷாஜகான்', 'திருப்பாச்சி' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளதால் அந்த அடிப்படையில் விஜய்க்கும் கதை கூறினேன். அவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும்போது இரண்டு கதாபாத்திரங்களும் சந்திக்கும் போன்ற காட்சிகள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். இந்தக் கதையில் இரண்டு வேடங்களும் சந்திக்காது என்பதால் விஜய் இதில் நடிக்கவில்லை.

இதன் பிறகு அஜித்தின் 'திருப்பதி' படத்திற்கும் ஒளிப்பதிவாளர் ஆக பணியாற்றியுள்ளேன். அந்த அடிப்படையில் அஜித்துக்கும் கதை கூறினேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. பட்ஜெட் காரணமாகவும், அஜித் அடுத்து வேறொரு படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்ததால் தள்ளிப்போனது. இந்நிலையில், ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மூலம் சிம்புவிடம் இந்த கதை சென்றது. கதையைக் கேட்டவுடன் சிம்புவிற்கு மிகவும் பிடித்தது. இதற்காக சிம்பு ஏற்கனவே ஒப்பந்தம் செய்து வைத்திருந்த 'முகமூடி' உள்ளிட்ட படங்களைத் தள்ளிவைத்து விட்டு சிலம்பாட்டத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !