பிளாஷ்பேக்: 5 படங்களை இயக்கிய ஆடியோகிராபர்
பொதுவாகவே நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் இயக்குனராக மாறுவதுண்டு. ஆனால் ஆடியோகிராபர்கள் (ஒலிப்பதிவாளர்கள்) இயக்குனராவது அபூர்வமானது. சமீத்திய உதாரணமாக ரசூல் பூக்குட்டியை சொல்லலாம். ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்பே இயக்குனரான ஒலிப்பதிவாளர் வி.எஸ்.ராகவன் (நடிகர் வி.எஸ்.ராகவன் அல்ல).
பிரபல ஆங்கில ஒலிப்பதிவாளர் சி.இ.பிக்ஸ் என்பவரிடம் தொழில்கற்று ஏவிஎம் நிறுவனத்தில் தலைமை ஒலிப்பதிவாளராக பணியாற்றினார். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒலிப்பதிவு செய்த இவர் பின்னர் ரேவதி புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தார். 'மனிதனும் மிருகமும், மேதாவிகள்' படங்களை தயாரித்தார், 'கள்வனின் காதலி, சமய சஞ்சீவி, சாரங்கதாரா, மணிமேகலை, சந்திரிகா' ஆகிய படங்களை இயக்கினார்.
பின்னர் தயாரிப்பு, இயக்கம் இரண்டும் தனக்கு சரிப்பட்டு வரவில்லை என்பதை உணர்ந்து கடைசி வரை தனது ரேவதி ஸ்டூடியோவை மட்டும் நடத்தி வந்தார். ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்தார், நடிகை ஆர்.பத்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.