உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்

நடிகர் தம்பி ராமையா இயக்கி 2000ம் ஆண்டு வெளிவந்த 'மனு நீதி' படத்தில் முரளி ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை பிரதியுஷா. அதன் பின், 'சூப்பர் குடும்பம், பொன்னான நேரம் தவசி, கடல் பூக்கள், சவுண்ட் பார்ட்டி' ஆகிய படங்களில் நடித்தார்.

பிரதியுஷாவும் அவரது காதலர் என்று சொல்லப்பட்ட சித்தார்த்தா ரெட்டி என்பவரும் 2002ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றனர். இருவரையும் மருத்துவமனையில் சேர்த்ததில் பிரதியுஷா மரணம் அடைந்தார். சித்தார்த்தா பிழைத்துக் கொண்டார்.

போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டதில் கழுத்து நெறிக்கப்பட்டு, மூச்சு திணறலால் பிரதியுஷா இறந்திருக்கலாம் என்ற அறிக்கை வந்தது. இதையடுத்து சித்தார்த்தா கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஐந்து வருட சிறை தண்டனை வழங்கியது. மேல் முறையீட்டில் இது இரண்டு வருடங்களாகக் குறைக்கப்பட்டது.

இதையடுத்து பிரதியுஷாவின் தாயார் உச்சநீதிமன்றத்தில் 2012ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். தனது மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை, அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டினார். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து கடந்த வருடம் முடிந்தது. தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ஜாமீனில் உள்ள சித்தார்த்தா நான்கு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை தூண்டுதலை உறுதி செய்த நீதிமன்றம் கொலை என்பதையும், பாலியல் வன்கொடுமை என்பதையும் நிராகரித்துள்ளது.

நீண்ட வருடங்களாக நடந்து வந்த வழக்குக்கு ஒரு முடிவு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !