'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தயாரிக்க, ராதிகா நடித்த 'தாய்கிழவி' படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தால் அவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதால் அடுத்தடுத்து பல சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல். தனது நண்பர் அருண்ராஜா காமராஜை இயக்குனர் ஆக்க எஸ்.கே புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை தொடங்கினார் சிவகார்த்திகேயன். அவர் முதலில் தயாரித்த 'கனா' வெற்றி பெற்றது. ஆனால், அடுத்து தயாரித்த படங்களில் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா, வாழ், கொட்டுக்காளி' ஆகிய படங்கள் சரியாக போகவில்லை. இந்த படங்களில் அவருக்கு நஷ்டம் என்று பேச்சு வந்தது.
அதனால், சில ஆண்டுகளாக படத்தயாரிப்பை குறைத்து இருந்தார். இப்போது தாய்கிழவி படத்தை ரிலீசுக்கு முன்பே சாட்டிலைட், டிஜிட்டலுக்கு விற்றுவிட்டார். அதனால் படம் லாபத்தை கொடுத்துள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தின் தியேட்டர் உரிமையை பெற்றுள்ளது. இதனால் சந்தோஷமாக இருக்கும் சிவகார்த்திகேயன் இன்னும் சில சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்க உள்ளார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என தகவல். கமலின் ராஜ்கமல் நிறுவனம்போல தனது நிறுவனத்தை வளர்க்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் விரும்புகிறாராம்.