உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சங்கீதா பற்றி அவதூறு : விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம்

சங்கீதா பற்றி அவதூறு : விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம்

விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் சங்கீதா பற்றி கடுமையாகவும், ஆபாசமாகவும் பேசியும், எழுதியும் வருகிறார்கள். இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, பொது வாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார். இந்தச் சூழலில், விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில், விஜயிடமிருந்து விவாகரத்து கோரிமனு தாக்கல் செய்திருப்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை ஆகும். அது இரு நபர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் உரிய விஷயமே தவிர, அதை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி, ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

ஆனால் விஜய் பெயரைச் சொல்லிக் கொண்டு இயங்கும் அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் சங்கீதாவை குறிவைத்து, ஆபாசமான, இழிவான ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை பதிவுகள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இது கருத்துச் சுதந்திரமல்ல பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை.

பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, பொது சொத்து அல்ல. ஒரு பெண், தனது திருமண வாழ்க்கை தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது, அப்பெண்ணை அவமதிக்கவோ, கேலி செய்யவோ, பாலியல் இழிவுக்கு உள்ளாக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. விவாகரத்து என்பது, அடிப்படை மனித உரிமை என்பதை மறந்து பெண்களை இழிவுபடுத்தும் போக்கு, ஆழமான ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும்.

திரைப்பட நடிகராக இருப்பது ஒரு தனிப்பட்ட தொழில். ஆனால் அரசியல் கட்சி தொடங்கி, மக்களிடம் ஆதரவு கோரும்போது, அந்த நபர் பொதுவாழ்வின் நெறிமுறைகளுக்கு உட்பட்டவராக மாறுகிறார். விஜய்யின் பெயரை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துவது குறிப்பாக சங்கீதாவை ஆபாசப்படுத்தி பதிவுகள் பரவும் போது அதை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது. அந்த மவுனம், அந்த செயல்களுக்கு மறைமுக ஒப்புதலாகவே பார்க்கப்படும்.

எனவே ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்க சமூக வலைதள வன்முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கண்டிக்க வேண்டும். இது ஒரு அரசியல் கட்சி தலைவரின் அரசியல் சமூக பொறுப்பு, இத்தகைய வலைதள வன்முறைக்கு மவுனம் காப்பது, குற்றத்திற்குச் சமமானதாகும்.

எனவே சங்கீதா மீது சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் ஆணாதிக்க சமூக வலைதள வன்முறை, ஆபாச, இழிவான தாக்குதல்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாக கண்டிக்கிறது. பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் பொழுதுபோக்கு விவாதமாக மாற்றும் போக்கை எதிர்க்கிறது.

பொது வாழ்வில் இருப்பவர்கள், பெண்களை இழிவுபடுத்தும் செயல்களுக்கு எதிராக தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும். பெண்களின் மரியாதை, சமத்துவம், சுதந்திரம் ஆகியவை எந்த அரசியல் ஆதரவுக்கும், ரசிக மனநிலைக்கு பலியாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை தடுத்து நிறுத்த காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். சங்கீதா மீது ஆபாச அவதூறு பரப்புபவர்கள் மீது தவெக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இந்த ஆபாச பிரசாரத்தை கண்டித்து எதிர்வினை ஆற்ற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

surya krishna
2026-03-03 21:44:27

என்னதான் இருந்தாலும் அவரோட வைப் அது முன்னாடி வைபாவும் இருக்கலாம் அதுக்காக இவ்வளவு தூரம் வந்து மற்ற மூன்றாம் தரப்பு ஆட்கள் பேசுறது இவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இவர் என்ன நல்ல அரசியல்வாதி இவர் எப்படி தமிழ்நாட்டை ஒழுக்கமாக ஆட்சி நடத்துவார் அரசியல் செய்வார்


தாரா
2026-03-03 10:56:15

இந்த மாதர் சங்கம் சாதாரண பெண்களுக்கு குரல் கொடுக்குமா ?