உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்?

தள்ளிப் போன “ஜனநாயகன், டாக்சிக்” ; 1000 கோடி முடக்கம்?


கன்னடத் திரையுலகத்தில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று கேவிஎன் புரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் தமிழில் இணைந்து தயாரித்த படம் விஜய் நடித்த 'ஜனநாயகன்'. கன்னடத்தில் இணைந்து தயாரித்த படம் யஷ் நடித்த 'டாக்சிக்'.

இதில் 'ஜனநாயகன்' படத்தின் பட்ஜெட்டில் 400 கோடி என்றும் 'டாக்சிக்' படத்தின் பட்ஜெட் 600 கோடி என்றும் சொல்கிறார்கள். ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய 'ஜனநாயகன்', தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் தள்ளி வைக்கப்பட்டது. தமிழக சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு மே மாதத்தில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் மார்ச் 19ம் தேதி வெளியாக வேண்டிய 'டாக்சிக்' படத்தை ஜுன் 4ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்கள்.

இந்த இரண்டு படங்களாலும் அந்த படங்களின் பட்ஜெட் என்று சொல்லப்படும் சுமார் 1000 கோடி தற்போது முடங்கிப் போயுள்ளது. இப்படத்திற்கான அந்த முதலீட்டுத் தொகை செலவிட ஆரம்பித்த நாட்களிலிருந்து அவற்றின் வட்டிக் கணக்கை போட்டால் அதுவே சில பல கோடிகளைத் தொடும். அவற்றையும் படத்தின் முதலீட்டுக் கணக்கில்தான் சேர்க்க வேண்டும்.

இப்படங்களுக்காக பேசப்பட்ட ஓடிடி தொகை, சாட்டிலைட் தொகை, வினியோகத் தொகை ஆகியவற்றிலும் மாற்றங்கள் வரலாம். அதனால், ஏதாவது தொகை குறைந்தால் கூட அதுவும் முதலீட்டுக் கணக்கில் சேர்த்தாக வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு பிரம்மாண்டப் படங்களைத் தள்ளி வைத்துவிட்டு ஒரு தயாரிப்பாளரால் எப்படி நிம்மதியாக உறங்க முடியும் என கோலிவுட்டிலும், சாண்டல்வுட்டிலும் வருத்தப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !