உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல்

சிரஞ்சீவி மனைவி திரும்பத் திரும்ப கேட்கும் இளையராஜா - சிரஞ்சீவி பாடல்


தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளது போலவே, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் இளையராஜா - சிரஞ்சீவி கூட்டணி என்றாலே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும், இசையும், அதில் சிரஞ்சீவியின் நடனமும் இப்போது வரையிலும் ரசிகர்களைக் கவர்ந்தவையாக இருக்கிறது.

மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா கலந்து கொண்டார். அவர் திரும்பத் திரும்பக் கேட்டும் சிரஞ்சீவியின் பாடல் எது என்ற கேள்வியை முடிப்பதற்கு முன்பே சுரேகா, 'மல்லி மல்லி இதி ராணி ரோஜூ' பாடல் என உடனடியாக பதிலளித்தார்.

1986ம் ஆண்டு கோதண்டராமி ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, சுஹாசினி, ராதா ஆகியோர் நடிக்க இளையராஜா இசையில் வெளிவந்த 'ராக்சஷடு' என்ற படத்தில் இடம் பெற்ற பாடல் அது. வெட்டூரி எழுதி, எஸ்பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி பாடிய அந்த மெலடி பாடலுக்கு சிரஞ்சீவி, சுஹாசினி ஆகியோர் நடனமாடி நடித்திருந்தனர்.

அந்தப் படம் தமிழில் 'ராட்சசன்' என்ற பெயரில் டப்பிங் ஆகி வெளியான போது, 'மல்லி மல்லி இது ஜாதி மல்லி' என பாடலும் தமிழில் எஸ்பிபி பாலசுப்ரமணியம், சித்ரா ஆகியோர் பாட மொழி மாற்றம் செய்யப்பட்டது. நேரடி தமிழ்ப் படத்தின் பாடல் போல இந்தப் பாடலும் சூப்பர் ஹிட்டான பாடலாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !