கவுண்டமணி கதாபாத்திர பெயரை டைட்டிலாக வைத்து நடிக்கும் யோகிபாபு
தமிழ் சினிமாவில் சமீப காலமாக தலைப்புகளுக்கு பஞ்சம் என்பதால் ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன படங்களின் பெயர்களை மீண்டும் வைப்பது, இன்னொரு பக்கம் ரஜினி போன்றவர்களின் பஞ்ச் டயலாக்குகள், பாடல் வரிகள் ஆகியவற்றையும் படங்களுக்கு டைட்டிலாக பயன்படுத்தினார்கள்.
சமீப காலமாக வடிவேலு, சந்தானம் போன்றவர்களின் பிரபலமான பஞ்ச் வசனங்களும் டைட்டிலாக மாறி வருகின்றன. அந்த வகையில் வடிவேலு காமெடியில் ரொம்பவே பிரபலமான 'கெணத்த காணோம்' என்கிற வார்த்தைகளை டைட்டிலாக வைத்து தற்போது யோகி பாபு கதையின் நாயகனாக ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த வாரம் அந்த படம் வெளியாக இருக்கிறது.
இப்படி வடிவேலுவின் பிரபலமான வசனத்தை டைட்டிலாக பயன்படுத்துகிறீர்களே என்று கேட்டால், “எல்லோரும் நம் நடிகர்கள் தானே.. அவர்கள் பயன்படுத்திய விஷயத்தை நாம் பயன்படுத்துவதில் தப்பில்லை. அடுத்ததாக 'ஆறு கொலை ஆறுமுகம்' என்கிற படத்தில் நடிக்கிறேன். இது கவுண்டமணி அண்ணன் ஒரு படத்தில் அஞ்சு கொலை ஆறுமுகம் என பெயர் வைத்திருப்பார். ராதாரவி அவர்கள் கவுண்டமணியை ஆறு கொலை ஆறுமுகமாக மாறும்படி உத்தரவிடுவார். நாங்களும் அதையே டைட்டிலாக மாற்றி விட்டோம். ஒருவன் ஆறு கொலைகளை பண்ணுகிறானா இல்லையா என்பதை காமெடியாக சொல்ல இருக்கிறோம்” என்று கூறியுள்ளார் யோகிபாபு.