இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பிரியதர்ஷன் கிட்டத்தட்ட 99 படங்களை இயக்கி முடித்து விட்டார். அடுத்ததாக தனது நூறாவது படத்தில் மோகன்லாலை வைத்து இயக்க இருக்கிறார். அதற்கு முன்னதாக தற்போது ஹிந்தியில் ஹைவான் மற்றும் பூத் பங்களா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பிரியதர்ஷன்.. இதில் அக் ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பூத் பங்களா திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் வித்யாபாலன், வாமிகா கபி உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்/ இந்தப் படம் காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ளது.
பெரும்பாலும் பிரியதர்ஷன் காமெடி படங்களை கொடுப்பதில் வித்தகர் என்றாலும் கூட காமெடி படங்களுக்கான கதையை உருவாக்குவதில் தான் மிகப்பெரிய அளவில் சிரமப்படுவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “காமெடி படங்களை உருவாக்குவதில் நான் நிறையவே சிரமப்பட்டு இருக்கிறேன்.. என்னுடைய முந்தைய படங்களை நான் மீண்டும் திரும்ப பார்க்கும்போது அவை மிகப்பெரிய ஹிட் படங்களாக இருந்தாலும் கூட ஏனோ என்னால் பெரிய அளவில் அவற்றை ரசித்து சிரிக்க முடியவில்லை. ஆனால் ரசிகர்களோ அதை பத்து முறை, 20 முறை என திரும்பத் திரும்ப பார்க்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இனிமேல் இதுபோன்ற காமெடி கலந்த ஹாரர் அல்லது காமெடி கலந்த திரில் படங்களை இயக்குவதை நிறுத்தப் போகிறேன். இது குறித்து முடிவும் எடுத்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.