உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கதை உரிமை பிரச்னையில் சிக்கிய ‛நெஞ்சில் ஓர் ஆலயம்'

பிளாஷ்பேக் : கதை உரிமை பிரச்னையில் சிக்கிய ‛நெஞ்சில் ஓர் ஆலயம்'

ஸ்ரீதரின் சூப்பர் டூப்பர் ஹிட் படம் 'நெஞ்சில் ஓர் ஆலயம்'. முக்கோண காதல் கதைக்கு இப்போதும் அதுதான் மைல்கல் படம். படக்கதையின் மூன்று முக்கிய பாத்திரங்களும் மிகவும் உன்னதமானவை. கதாநாயகி சீதா, நிர்ப்பந்தத்தின் பேரில் தன்னுடைய காதலனை மறந்துவிட்டு வேறொருவனை கைப்பிடித்திருந்தாலும், தன் கணவன் மீது உயிராக இருப்பவள். நோயுற்ற தன் கணவனின் மருத்துவராக மாஜி காதலனே வந்தபோதும் துளிகூட சஞ்சலமோ சபலமோ கொள்ளாதவர். அவளுடைய கணவனோ, தான் இறக்க நேர்ந்தாலும் தன் மனைவி மீண்டும் மணம் செய்து கொண்டு நலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற பெரிய மனது கொண்டவன்.

முக்கோணத்தின் இன்னொரு முக்கிய கோணமாக விளங்குபவர் டாக்டர். முரளி. சந்தர்ப்பவசத்தால் தான் நேசித்த பெண்ணை மணக்க முடியாமல் போகும் போது, மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதன் மூலம் தன்னுடைய சோகத்தை மறக்க நினைப்பவர். முன்னாள் காதலி தன்னுடைய உதவியை எதிர்பார்த்து நிற்கும் போதும், அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள சிறிதும் நினைக்காதவர். அவளுடைய நலத்தையும் பெருமையையும் பேண நினைப்பவர்.

சீதா வேடத்தில் நடித்தவர் தேவிகா. புற்றுநோய்க்கு ஆளான கணவன் வேணுவாக முத்துராமன், மாஜி காதலன் வேடமேற்றவர் கல்யாண் குமார். 14 நாட்கள் ஒரு மருத்துவமனையில் நடப்பதாக உள்ள கதையை, 22 நாட்களில் எடுத்து முடித்தார் ஸ்ரீதர்.

இது இப்படி இருக்க, படம் வெளியானதிலிருந்து இருபது வருடங்களுக்கு முன் 'டாக்டர். நீலமேகம்' என்றொரு கதையை குண்டூசி கோபால் என்ற பத்திரிகையாளர் எழுதி வார இதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. அந்த கதையும், நெஞ்சில் ஓர் ஆலயம் கதையும் ஒன்றுதான் என்று அப்போது சிலர் அதிகம் பிரபலமாக அந்த கதையை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர். 'கணவனுக்கு சிகிச்சை அளிக்க வரும் முன்னாள் காதலன்' என்பதுதான் அந்த சிறுகதையின் ஒன் லைனும்.

அப்போதெல்லாம் காப்பி ரைட் பிரச்னை பெரிதாக பார்க்கப்படவில்லை என்பதாலும், மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒரு சினிமாவை அதிகம் அறியப்படாத ஒரு சிறுகதையோடு இணைத்து பேசக்கூடாது என்ன கண்ணியத்தாலும் அந்த பிரச்னை அப்போது பெரிது படுத்தப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !