உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோகன்லால்-சுரேஷ்கோபி பட தயாரிப்பளர்களின் 'தில்'

மோகன்லால்-சுரேஷ்கோபி பட தயாரிப்பளர்களின் 'தில்'

கேரளாவில் ஜன-5 முதல் உள்ள தியேட்டர்களை திறந்துகொள்ளவும் ஆனால் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்கவும் கேரள அரசு தளர்வுகள் அறிவித்துள்ளது. ஒரு பக்கம் ஒடிடியில் தங்கள் படத்தை வெளியிட நினைத்திருந்த தயாரிப்பாளர்களுக்கு, 50 சதவீத இருக்கை அனுமதி என்பது திருப்தி தரவில்லை.

இந்தநிலையில் மோகன்லாலை வைத்து ஒரே நேரத்தில் மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் மற்றும் த்ரிஷ்யம்-2 ஆகிய படங்களை தயாரித்துள்ளார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர். இதில் சமீபத்தில் தயாரித்த த்ரிஷ்யம் -2 படத்தை மட்டும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்கிறார். ஆனால் பிரமாண்ட பட்ஜெட்டில் கடந்த வருடமே தயாரித்த, வரலாற்று படமான 'மரைக்கார்' படத்தை ஓடிடி நிறுவனங்கள் கேட்டுக்கொண்டும் அவர் தரவில்லை..

ஒரு வருடமாக ரிலீசாகாமல் பெரும் பணத்தை அதில் முடக்கியிருக்கும், நிலையிலும் கூட, தியேட்டர்களில் அந்தப்படத்தை திரையிடுவதுதான் அந்தப்படத்திற்கு செய்யும் மரியாதை, என உறுதியாக இருக்கிறார். மேலும் மார்ச் மாதத்திற்குள் நிச்சயம் கேரளாவிலும் நூறு சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைத்து விடும் என்றும் நம்பிக்கையுடன் வரும் மார்ச்-26ஆம் தேதி படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டார். ஆண்டனி பெரும்பாவூர்..

அதேபோல சுரேஷ்கோபி நடிப்பில் காவல் என்கிற ஆக்சன் படத்தை தயாரித்துள்ளார் பிரபல தயாரிப்பாளர் சோபி ஜார்ஜ். அதுமட்டுமல்ல, இவர் கடந்த வருடம், இளம் நடிகர் ஷேன் நிகம் என்பவரை வைத்து பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொண்டு தயாரித்த 'வெயில் படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் காவல் படத்திற்கு 7 கோடி ரூபாய் தருவதாக முன்னணி ஓடிடி நிறுவனம் முன்வந்தும் அதற்கு மறுத்து விட்டார் சோபி ஜார்ஜ். தனது இரண்டு படங்களையும் தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்வேன் என்பதிலும் உறுதியாக இருக்கிறார் சோபி ஜார்ஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !