மோகன்லாலுடன் மோதும் கேஜிஎப் வில்லன்
த்ரிஷ்யம் -2 படப்பிடிப்பை முடித்துவிட்ட மோகன்லால் தற்போது ஆராட்டு என்கிற படத்தில் முழுவீச்சில் நடித்து வருகிறார். ஏற்கனவே மிஸ்டர் பிராடு, வில்லன் உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கிய மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். மோகன்லாலின் திரையுலக பயணத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்த 'புலிமுருகன்' பட கதாசிரியர் உதயகிருஷ்ணா தான் இந்தப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.
இந்தப்படத்தில் கேஜிஎப் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்த நடிகர் கருடா ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தில் இவர் மெயின் வில்லன் இல்லை என்றாலும் மோகன்லாலும் இவரும் மோதும் காட்சிகள் உண்டு என்கிறார் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். ஆராட்டு படப்பிடிப்பு தளத்தில் மோகன்லால், கருடா ராம் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.