முதன்முறையாக பிரபாஸ் படத்தில் இணைந்த ஸ்ருதி
இந்திய அளவில் பிரம்மாண்ட நாயகனாக உருவெடுத்துள்ள பிரபாஸ், இப்போது ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் ஒரு படம் என நான்கு படங்களில் நடிக்கிறார். இவற்றில் ராதே ஷ்யாம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அடுத்து சலார் படம் துவங்க உள்ளது. சமீபத்தில் ஐதராபாத்தில் இப்படத்திற்கான பூஜை நடந்தது. இதை கே.ஜி.எப். புகழ் பிரசாந்த நீல் இயக்குகிறார்.
இப்படத்தில் நாயகியாக ஹிந்தி நடிகை ஒருவர் நடிப்பார் என கூறப்பட்டது. பின்னர் ஸ்ருதிஹாசன் அந்த வேடத்தில் நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தோம். இப்போது அது உண்மையாகிவிட்டது. சலார் படத்தில் ஸ்ருதிஹாசன் இணைந்துள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று ஸ்ருதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இதன்மூலம் முதன்முறையாக பிரபாஸ் படத்தில் இணைந்துள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஸ்ருதி பிரபலம் என்பதால் இவரை நாயகியாக தேர்வு செய்துள்ளனர்.