பேண்டஸி படமான ஆலம்பனா படப்பிடிப்பு நிறைவு
குழந்தைகளை குஷிப்படுத்தும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு தான். அந்தவகையில் ஆலம்பனா என்ற பெயரில் உருவாகியுள்ள பேண்டஸி படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து தயாரித்துள்ளனர். வைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர்துபான் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். பாரி கே.விஜய் இயக்கி உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனை, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கியுள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றுள்ளது. இதனைப் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், பாடல்களையும் வெளியிட உள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹா ஆதி இசையமைத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சிகளை படமாக்கி உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலிலிருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ள மக்களை, சிரிப்பு மழையில் நனைய வைத்து, குழந்தைகளை குஷிப்படுத்த ஆலம்பனா தயாராகி வருகிறது.