'நெஞ்சம் மறப்பதில்லை' வெளியாகுமா ?
செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் பல்வேறு சிக்கல்களைக் கடந்து இந்த வாரம் மார்ச் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் பெற்ற 1.24 கோடி கடனை படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னம் தராததால் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதன் காரணமாக படத்தை வெளியிட நீதிமன்றம் தடை வழங்கியுள்ளது.
கடைசி நேரத்தில் பெற்ற தடையால் இப்போது படம் வெளியாகுமா ஆகாதா என்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது. 1.24 கோடி தான் என்பதால் எப்படியும் அதை அடைத்து படத்தை வெளியிட முயற்சிப்பார்கள் என்றே தெரிகிறது.
ஏற்கெனவே சில வருடங்களாக முடங்கியிருந்த படம் இப்போதாவது வருகிறதே என செல்வராகவன் ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் இப்போது தடை என்ற தகவலால் வருத்தமடைந்துள்ளனர். படம் வெளியாக யார் பஞ்சாயத்து செய்யப் போகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.