தாதாசாகேப் பால்கே விருது : மத்திய அரசுக்கு நன்றி சொன்ன ரஜினி
ADDED : 1695 days ago
ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரஜினிக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனக்கு விருது வழங்கியதற்கு மத்திய அரசிற்கும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் ரஜினி. தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் :
இந்திய திரையுலகின் மிக உயரிய தாதா சாஹேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்களை செய்த என் அண்ணன் திரு.சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்த்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு.கே.பாலசந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றம் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலககெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.
என்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி தலைவர் நண்பர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.