அண்ணாத்த - சென்னையில் டப்பிங் முடித்ததும் அமெரிக்கா பறக்கும் ரஜினி
சிவா இயக்கத்தில் இமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அண்ணாத்த'. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் ஐதராபாத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வருகிறது.
ரஜினிகாந்த் அவருடைய படப்பிடிப்பை முடித்துவிட்டதாகத் தகவல். இன்னும் சில நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து குழுவினர் சென்னை திரும்ப உள்ளார்களாம். சென்னை வந்ததும் ரஜினிகாந்த் உடனடியாக டப்பிங் பேசிக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகச் சொல்கிறார்கள்.
டப்பிங் பேசி முடித்த பின் நாம் முன்பே சொன்னபடி ரஜினிகாந்த் வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளாராம். அங்கு ஏற்கெனவே இருக்கும் ஐஸ்வர்யா தனுஷ் அப்பா ரஜினிகாந்தின் மருத்துவ பரிசோதனையை கூடவே இருந்து கவனித்துக் கொள்வாராம்.
'அண்ணாத்த' படத்தை திட்டமிட்டபடியே தீபாவளிக்குத் திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் கொரோனா காலகட்டத்திலும் படப்பிடிப்பை இடைவிடாது நடத்தியதாகச் சொல்கிறார்கள். ரஜினிகாந்த் தரப்பில் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால்தான் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடிந்தது என்கிறார்கள்.