அஜித் வழங்கிய கொரோனா நிதி ரூ.25 லட்சமா, ரூ.2.5 கோடியா? - குழப்பம் வந்தது ஏன்?
கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் குமார் ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். முன்னதாக அவர் ரூ.2.5 கோடி வழங்கியதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி உள்ள நிலையில் தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின், கொரோனா தடுப்பு பணிக்காக அரசுக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து திரையுலகில் சார்பில் முதல் ஆளாக நடிகர் சிவகுமார் குடும்பம் சார்பில் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.1 கோடி நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாக சென்று வழங்கினர். தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ.25 லட்சம் நிதி வழங்கினார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தன் பங்கிற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் வழங்கி உள்ளார். இதை அவர் வங்கி பரிவர்த்தனை மூலம் வழங்கி உள்ளார்.
அஜித் வழங்கிய நிதியில் குழப்பம்
முன்னதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் அஜித் ரூ.2.5 கோடி நிதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா, வங்கி பரிவர்த்தனை மூலம் அஜித் ரூ..25 லட்சம் கொரோனா நிதி வழங்கியாக தெரிவித்தார். இதனால் அஜித் வழங்கிய நிதி தொடர்பாக சற்று குழப்பம் நிலவியது. பின்னர் அரசு சார்பிலும் திருத்தப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அவர் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.