கணவர் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதி வழங்கிய சவுந்தர்யா ரஜினி
ADDED : 1705 days ago
கொரோனா இரண்டாவது அலையை தடுக்கும் பொருட்டு, அதன் பணிக்காக திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை அளித்து வருகின்றனர். அந்தவகையில் திரையுலகினர் சூர்யா குடும்பம், அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கொரோனா நிவாரண நிதி வழங்கி உள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த்தின் இளைய மகளும், இயக்குனருமான சவுந்தர்யா, தன் கணவர் விசாகன் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினார். இந்த சந்திப்பின் போது சவுந்தர்யா, விசாகன் மற்றும் வணங்காமுடி (சவுந்தர்யா மாமனார்) ஆகியோரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர். அபெக்ஸ் பார்மெசி என்ற நிறுவனத்தை விசாகன் நடத்தி வருகிறார். தங்கள் நிறுவனத்தின் சார்பாக இந்த நிதியை வழங்கி உள்ளனர்.
முன்னதாக சவுந்தர்யா ரூ.1 கோடி நிதி வழங்கினார் என்றதும், அது நடிகர் ரஜினிகாந்த் சார்பாக வழங்கப்பட்டது என தவறாக செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.