நடிகர், டப்பிங் கலைஞர் வீரமணி காலமானார்
பழம்பெரும் நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர் ஆர்.வீரமணி நேற்று காலமானார். அவருக்கு வயது 71. வயது முதிர்வு காரணமாக சினிமாவில் இருந்து விலகி நெசப்பாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவருக்கு நேற்று அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனடியாக ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வீரமணிக்கு நாகரத்தினம் என்ற மனைவியும் கவிதா, சண்முகப்பிரியா, பவித்ரா என்ற மகள்களும் உள்ளனர்.
எம்.ஆர்.ராதாவுடன் நாடகங்களில் நடித்து வந்த வீரமணி. பின்பு அவராலேயே சினிமாவுக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது தமிழ் படங்களில் நடித்த தெலுங்கு நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றினார். அதோடு நடிகர் நாகேசுக்கு மாற்று நடிகராக (டூப்) பணி செய்தார்.
இதுதவிர பத்ரகாளி, சின்ன பூவே, பொண்ணு வீட்டுக்காரன், தங்கமான ராசா உள்பட ஏராளமான படங்களிலும், ராதிகா தயாரித்து, நடித்த தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். டப்பிங் யூனியன் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பல ஆண்டுகளாக பதவி வகித்தார்.