ஈரோட்டில் கோவில் நிர்வாகம் காணிக்கை ஏற்க மறுப்பு: பெண் பக்தர் பரிதவிப்பு
ஈரோடு: காணிக்கையாக வழங்கும் வெண்கல மணியை, கோவில் நிர்வாகம் ஏற்க மறுப்பதாக, கலெக்டர் அலுவலகத்தில், பெண் ஒருவர் புகார் செய்தார்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், பெரியகுட்டைமேட்டை சேர்ந்தவர் மாலதி. ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், புகார் பெட்டியில், நேற்று 24ம் தேதி மனுவை போட்டுவிட்டு கூறியதாவது: வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவிலுக்கு, வெண்கல மணியை காணிக்கையாக வழங்க, எனது தாயார் வேண்டுதல் வைத்திருந்தார்.
இதற்காக எட்டு கிலோ எடையில், வெண்கல மணியை தயாரித்து வழங்கினால், கோவில் நிர்வாகம் ஏற்க மறுக்கிறது. கடந்த ஜன., மாதம் முதல் மணியை எடுத்து செல்கிறேன். அதிகாரிகள் அனுமதித்தாலும், கோவில் நிர்வாகிகள் எனக்கூறும் சிலர், மணியை பெற்று, ரசீது வழங்க மறுக்கின்றனர். கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன், கலெக்டரிடம் மனு வழங்கியும், பயனில்லை. மணியை ஏற்காவிட்டால், கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விட்டு செல்வேன். இவ்வாறு அவர் கூறினார். அங்கிருந்த போலீசார், ’உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், கலெக்டர் வரமுடியாது. கோவிலில் சென்று வழங்குங்கள்’ என்று கூறி அனுப்பினர். தேர்தல் முடிந்த பின், மீண்டும் மணியுடன் வருவதாக கூறி, மாலதி சென்றார்.