ஜன., 20 முதல் திருமலையில் இலவச லட்டு
திருமலை: வரும், 20ம் தேதி முதல், ஏழுமலையானை தரிசிக்கும் அனைத்து பக்தர்களுக்கும், இலவச லட்டு வழங்கப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயிலை, 10 நாட்கள் திறந்து வைக்க கோரி, வழக்கு தொடரப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு முன், தேவஸ்தானம் இது குறித்து விவாதித்து முடிவெடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக நடந்த அவசர குழு கூட்டத்தில், வழக்கம் போல் வைகுண்ட ஏகாதசியின் போது, இரண்டு நாட்கள் வைகுண்ட வாயில் திறந்து வைக்க, ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், வைகுண்ட வாயிலை, 10 நாட்கள் திறந்து வைப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க, தனி கமிட்டி அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கும், ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டம், வரும், 20ம் தேதி முதல் துவக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.