பரிகார பூஜைகள் நடத்தி கைலாயநாதர் கோவில் திறப்பு!
ADDED :4999 days ago
திருவண்ணாமலை: பரிகார பூஜைகள் நடத்தி, ஆரணி கைலாயநாதர் கோவில் திறக்கப்பட்டது. ஆரணி கைலாயநாதர் கோவில் தேரோட்டம் கடந்த 1ம் தேதி நடந்தது. அப்போது, தேர் அச்சு முறிந்து சாய்ந்து விழுந்ததில், ஐந்து பேர் பலியாகினர். இதனால், கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. கோவிலை திறக்க, நேற்று முன்தினம் காலை கோவில் சிவாச்சாரியார்கள் கொடிமரம் முன், யாகம் நடத்தி நித்திய பூஜைக்கான வாஸ்து சாந்தி, ரதசாந்தி, உள்ளிட்ட பல்வேறு பரிகார பூஜைகள் நடத்தினர். உற்சவ மூர்த்திகள், விநாயகர், முருகர், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பிரம்மோற்சவம் முடிவடையாத நிலையில் நேற்று முன்தினம் பரிகார பூஜைகள் நடத்திய பின், பிச்சாண்டவர் வீதியுலா வழக்கம்போல் முக்கிய வீதிகள் வழியாக செல்லாமல் கோவில் மாட வீதியில் மட்டும் சென்றது.