நோன்பு கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்கள் வீட்டில் தொழுகை நடத்த வேண்டுகோள்
வேலூர்: ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கும் முஸ்லிம்கள், வீட்டில் இருந்தபடி தொழுகை செய்ய வேண்டும் என, கலெக்டர் சண்முகசுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மசூதி முத்தவல்லிகள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் எஸ்.பி., பிரவேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம் தலைமை வகித்து பேசியதாவது: வேலூர் மாவட்டத்தில், ரம்ஜான் பண்டிகையையொட்டி நோன்பு கஞ்சிக்கான அரிசி மொத்தம், 97 மசூதிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த மசூதிகளில் மொத்தம், 78 ஆயிரத்து, 46 பேர் ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கிறார்கள். ரம்ஜான் நோன்பை கடைப்பிடிப்பவர்கள், வீட்டிலிருந்தபடி தொழுகை செய்து, கஞ்சி தயார் செய்து அருந்த வேண்டும். மசூதியில் இவை செய்யக்கூடாது. கருகம்பத்தூர், கொணவட்டம், ஆர்.என்.பாளையம், சைதாப்பேட்டை, கஸ்பா, சின்ன அல்லாபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பரவுவதை தடுக்க, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ளோர் வெளியே வரக்கூடாது. அங்கு வசிப்போர் முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று, ஜமாத்காரர்கள் எடுத்துக்கூற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.