புதுச்சேரியில் கோவில் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு
ADDED :2093 days ago
பாகூர் : கொரோனா பரவல் தடுப்பு விதிமுறையை மீறியதாக, கோவில் நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், கன்னியக்கோவில் புது நகரில், மாரியம்மன் கோவில் கட்டுமான பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நேற்று அங்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சமூக விலகலை பின்பற்றாமல் பங்கேற்று உள்ளதாக கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கோவிலில் கூடியிருந்தவர்களை கலைந்து போக செய்தனர். மேலும், பூஜை செய்த அய்யர், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது, தடையை மீறி, நோய் பரவும் வகையில் நடந்து கொண்டதாக, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.